திருமலை: திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க இலவச தரிசன டிக்கெட் வாங்குவதற்காக, கடும் குளிரிலும் சமூக இடைவெளி இன்றி பக்தர்கள் குவிந்தனர். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இலவச தரிசனத்தில் சுவாமி தரிசனம் செய்ய தினமும் 3 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். திருப்பதி அலிபிரி பூதேவி காம்ப்ளக்ஸ் மையத்தில் தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்பட்டு வருகிறது. ஒரு நாளைக்கு 3 ஆயிரம் டிக்கெட்டுகள் மட்டுமே வழங்கப்படுவதால், இதை பெற ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருப்பதியில் குவிந்தனர். காலை 6 மணிக்கு கவுன்டர்கள் திறக்கப்பட்டு டிக்கெட் வழங்கப்படுகிறது. ஆனால், பக்தர்கள் முதல் நாள் இரவே கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் வரிசையில் காத்திருக்கின்றனர். .
இதில், பெரும்பாலான பக்தர்கள் முகக்கவசம் இன்றியும், சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும் உள்ளனர். இதனால், கொரோனா பரவும் அபாயம் உள்ளது. பலர் கைக்குழந்தைகளுடன் கடும் பனியில் தவிக்கின்றனர்.