காவல்துறையின் நன்மதிப்பை கெடுத்ததற்காக மக்களிடம் முதல்வர் எடப்பாடி பகிரங்க மன்னிப்பு கேட்பாரா? திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி

சென்னை: “தமிழகக் காவல்துறையில் ‘’கருப்பு ஆடுகளுக்கு’’ சலுகைகளும், பதவி உயர்வும் வழங்கி, அவர்களைக் காப்பாற்றுவதற்காக, அந்தத் துறையின் நன்மதிப்பையே கெடுத்த பாதகத்திற்காக, முதல்வர் பழனிசாமி தமிழக மக்களிடம் பகிரங்க மன்னிப்புக் கேட்பாரா?” என்று மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை: சிவராம பெருமாள் கொரோனா காலத்தில் மக்களுக்கு மருத்துவப் பணியாற்றிக் கொண்டிருந்த ஒரு மருத்துவர். அவரை அம்மாவட்டத்தில் உள்ள டி.எஸ்.பி. பாஸ்கர் விசாரணை என்ற பெயரில் அழைத்து மிரட்டி- அவரது கண்ணெதிரிலேயே அவருடைய மனைவியைத் தரக்குறைவாக-அவதூறாகப் பேசியதால், மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்ற செய்தி மிகுந்த வேதனையளிக்கிறது.

இந்த டி.எஸ்.பி. போன்ற ஒரு சிலரால்-தமிழகத்தின் திறமை மிக்க காவல்துறையில் பணியாற்றும் ஆயிரக்கணக்கான காவலர்களுக்கும், அதிகாரிகளுக்கும் இருக்கும் நன்மதிப்பு கெடுவது மிகுந்த கவலையளிக்கிறது. சாத்தான்குளம் ஜெயராஜ்-அவர் மகன் பென்னிக்ஸ் கொலை வழக்கை விசாரிக்கும் சி.பி.ஐ., “கொலையுண்ட இருவருக்கும் ரத்தக் காயங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. கடுமையாகத் தாக்கப்பட்டு உயரிழந்துள்ளார்கள் என்பது தெரியவருகிறது. இந்தக் கொடூரக் கொலை நடந்த உடன் முதல்வர் பழனிசாமி என்ன சொன்னார்? “சிறையில் இருந்த பென்னிக்ஸ்-க்கு மூச்சுத்திணறலும், ஜெயராஜூக்கு உடல் நலக்குறைவும் ஏற்பட்டு, இருவரும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு, சிகிச்சை பலனளிக்காமல் அங்கு உயிரிழந்தார்கள்” என்று பச்சைப் பொய்யைச்  அறிக்கை என்ற பெயரில் வெளியிட்டார். அதுமட்டுமின்றி சட்ட அமைச்சர் சி.வி.சண்முகத்தின் மூலமும் மறைக்க வைத்தார்.  

சாத்தான்குளம் காவல் நிலையத்தில் நடந்த இரட்டைக் கொலையை ஒரு முதல்வரும், சட்ட அமைச்சரும் போட்டி போட்டுக் கொண்டு மறைத்ததன் விளைவு, இன்று  தமிழகக் காவல்துறையில் “கருப்பு ஆடுகளின்” கையோங்கி - நேர்மையான போலீஸ் அதிகாரிகளுக்கும், சட்டத்திற்கு உட்பட்டுச் செயல்படும் போலீசாருக்கும் மரியாதை குறைந்தது என்ற நிலை உருவாக்கப்பட்டு விட்டது. திமுக தொடக்கத்திலிருந்தே முதல்வர் பழனிசாமி நடத்தும் விசாரணையில் நம்பிக்கையில்லை. அதனால்தான் சிபிஐ விசாரணை கோரி வந்தேன். இன்றைக்கு வெளிவந்துள்ள பதற வைக்கும் தகவல்கள், “எடப்பாடியின் விசாரணை” என்றால், கொடநாடு கொலைகள் போல் மர்மப் புதைகுழியில் மறைக்கப்பட்டிருக்கும் என்பதை வெளிச்சம் பாய்ச்சிக் காட்டி இருக்கின்றன. சாத்தான்குளம் இரட்டைக் கொலை வழக்கில் அதிமுக அரசின் மீது திமுக வைத்த குற்றச்சாட்டுகள் உண்மை என்பது இப்போது ஆதாரபூர்வமாக-சி.பி.ஐ. குற்றப்பத்திரிக்கை வடிவமாகவே வெளிவந்து விட்டது. இப்போதாவது திமுக நியாயத்தின் பக்கம் நின்று போராடுகிறது; “அரசியலுக்காக” மட்டும் அல்ல என்பதை முதல்வர் பழனிசாமி புரிந்து கொள்ள வேண்டும்!

ஊழல் ஆழமாகப் புரையோடியிருக்கும்  முதல்வர் பழனிசாமி ஆட்சியில், தமிழகக் காவல்துறையின் நன்மதிப்பு படுபாதாளத்திற்கும் கீழே போய் விட்டது. . “கரன்சி” அடிப்படையில் போஸ்டிங்-“அமைச்சர்கள் பரிந்துரையில்” டிரான்ஸ்பர், “துறை சார்ந்த நடவடிக்கைக்கு ஆளாகி இருப்பவர்களுக்கு முக்கிய பதவிகள்” “நீதிமன்றத்தில் வழக்கு இருக்கும் போலீஸ் அதிகாரிகளைக் கூட முக்கியப் பதவியில் அமர்த்துவது” “மனித உரிமை மீறல்களைச் செய்யும் போலீசாருக்கு மகுடம் சூட்டுவது” “பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை கொடுத்தாலும் பதவி” என்று பழனிசாமி செய்யும் பலவித  படுபாதகச் செயல்கள்-தமிழகக் காவல்துறைக்கு மிகப்பெரும் தலைகுனிவை ஏற்படுத்தி வருகிறது. கொலைகளை மறைத்ததற்காகவும் - சாத்தான்குளம் காவல் நிலையத்தில் உள்ள ஒரு சில போலீசாரைக் காப்பாற்ற ஒட்டுமொத்த தமிழகக் காவல்துறையின் நன்மதிப்பையே கெடுத்ததற்காகவும்,  முதல்வர் பழனிசாமி தமிழக மக்களிடம் பகிரங்க மன்னிப்புக் கேட்பாரா?.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: