ஜம்மு-காஷ்மீரில் பணியாற்றிய சங்கரன்கோவில் ராணுவவீரர் திடீர் மரணம்: குடும்பத்தினர் அதிர்ச்சி

சங்கரன்கோவில்: தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள ஆயாள்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் துரைப்பாண்டியன் மகன் முல்லைராஜ் (28). திருமணம் ஆகவில்லை. இவர் கடந்த 9 ஆண்டாக இந்திய ராணுவத்தில் பணியாற்றி வந்துள்ளார். தற்போது ஜம்மு-காஷ்மீர் எல்லைப்பகுதியில் பணியாற்றி வந்தார். இந்நிலையில் நேற்று பணியில் இருந்தபோது முல்லைராஜ் திடீரென இறந்து விட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்த தகவல் அவரது பெற்றோருக்கு தொலைபேசி மூலம் தெரிவிக்கப்பட்டது. முல்லைராஜ் திடீரென இறந்த தகவல் அறிந்து அவரது தாய் அழகம்மாள் மற்றும் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.

முல்லைராஜ் மரணம் குறித்து குருவிகுளம் ஒன்றிய அதிமுக செயலாளர் சுப்பையாபாண்டியன் உள்ளிட்ட நிர்வாகிகள் அமைச்சர் ராஜலட்சுமி கவனத்துக்கு கொண்டு சென்றனர். இதையடுத்து அவர், தென்காசி மாவட்ட கலெக்டர் மற்றும் சென்னையில் உயர் அதிகாரிகளுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ராணுவவீரர் முல்லைராஜ் மரணம் குறித்து உரிய விசாரணை நடத்தவும், அது தொடர்பான தகவலை குடும்பத்திற்கு தெரிவித்து  அவரது உடலை  சொந்த ஊர் கொண்டுவர நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டார். ராணுவவீரர் திடீர் மரணத்தை தொடர்ந்து அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஆயாள்பட்டி கிராமம் சோகத்தில் மூழ்கி உள்ளது

Related Stories: