திருவனந்தபுரம்: சிபிஐ உட்பட 7 மத்திய விசாரணை அமைப்புகளின் விசாரணை கேரள அரசுக்கு கடும் நெடுக்கடியை ஏற்படுத்தி உள்ளது. திருவனந்தபுரம் ஐக்கிய அரசு அமீரக தூதரக பார்சல் வழியாக தங்கம் கடத்திய வழக்கு, முதல்வர் பினராய் விஜயனுக்கும், கேரள அரசுக்கும் கடும் நெருக்கடியை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் முதலில் சுங்கா இலாகாவும், தொடர்ந்து என்ஐஏ, மத்திய அமலாக்கத்துறை, வருமான வரித்துறை ஆகியன விசாரணை தொடங்கி உள்ளன. இதற்கிடையே பெங்களூருவில் கைது செய்யப்பட்ட போதைப்பொருள் கும்பலுக்கும், தங்க கடத்தல் கும்பலுக்கும் தொடர்பு இருப்பதை தொடர்ந்து, மத்திய போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகம் விசாரணை தொடங்கியது. இந்த வழக்கில் தீவிரவாதிகளுக்கும் தொடர்பு இருப்பதாக தெரியவந்ததால் மத்திய புலனாய்வு அமைப்பான ஐபி விசாரணை நடத்தி வருகிறது.