புதுடெல்லி: லடாக் எல்லை பிரச்னையில் கடந்த ஏப்ரல் முதல் இந்தியா - சீனா இடையே பதற்றம் நீடித்து வருகிறது. ராணுவ, தூதரக ரீதியிலான பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடந்து வரும் நிலையில், கடந்த மாதம் 29, 30 தேதிகளில் பாங்காக் திசோ ஏரி, கோங்கா லா, கோக்ரா பகுதிகளில் சீனா அத்துமீறி ஊடுருவ முயன்றது. இது இந்திய ராணுவத்தினரால் முறியடிக்கப்பட்டது. இதனிடையே, ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் இரு நாடுகளின் வெளியுறவு, பாதுகாப்பு துறை அமைச்சர்கள் பேச்சுநடத்தினர். இதில், எல்லையில் பதற்றத்தை தணிக்க, 5 அம்ச ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. அதையும் மீறி சீன ராணுவம் செயல்பட்டு வருகிறது. குளிர்காலம் தொடங்க உள்ள நிலையில், லடாக் எல்லையில் உள்ள உயரமான, ராணுவ முக்கியத்துவம் வாயந்த மலைச் சிகரங்களை சீன ராணுவம் கைப்பற்ற திட்டமிட்டு இருப்பதாக ராணுவத்துக்கு ரகசிய தகவல் கிடைத்தது.