டெல்லி: நாடு முழுவதும் விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய மாநிலங்களவையில் திமுக உறுப்பினர் வில்சன் கோரிக்கை விடுத்துள்ளார். கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் சுமார் மாதங்கள் பொது முடக்கம் அமலில் உள்ளது. இதனால் நாட்டின் பொருளாதாரம் மற்றும் மக்களின் வாழ்வாதாரத்தில் மிகப்பெரிய தாக்கம் ஏற்பட்டுள்ளது. பெரும்பாலானோர் வேலை இழந்து கடும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர். அதே நேரம் விவசாயிகளும் போதிய வருவாய் இல்லாமல் கடன் வட்டி தொல்லையால் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இந்நிலையில் வேளாண் கடன்களை தள்ளுபடி செய்ய வழிவகை செய்ய வேண்டும் என்று மாநிலங்களவையில் திமுக எம்.பி வில்சன் வலியுறுத்தினார்.இதுகுறித்து அவர் பேசுகையில், “தனிநபர்கள் மற்றும் உரிமையாளர்கள் ஏன் பாகுபாடு காட்டப்படுகிறார்கள்? இந்த அரசாங்கம் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு மட்டுமே?.பொது மக்கள் வாங்கிய கடன்களுக்கான வட்டி விகிதத்தை தள்ளுபடி செய்ய ரிசர்வ் வங்கிக்கு உத்தரவு பிறப்பிக்குமாறு நான் அரசாங்கத்தை கேட்டுக்கொள்கிறேன். வேளாண்மை, சில்லறை விற்பனை மற்றும் நிபந்தனை கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்யுமாறு நான் நிதி அமைச்சரிடம் கேட்டுக்கொள்கிறேன். சாமானியர்கள் நீதிமன்றத்திற்கு செல்ல வேண்டும், அதே நேரத்தில் கார்ப்பரேட்டுகள் அரசாங்கத்தால் பாதுகாக்கப்படுகின்றன.
கொரோனா பரவல், ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதித்துள்ள நிலையில் விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். வீட்டுக் கடன், வங்கிக்கடன், நகைக்கடன்களுக்கான வட்டியையும் தள்ளுபடி செய்ய வேண்டும்.2006ல் முதல்வராக பதவியேற்ற கலைஞர் தமிழகத்தில் விவசாய கடன் அனைத்தையும் தள்ளுபடி செய்தார்.2006ல் தமிழகத்தில் கலைஞர் விவசாய கடன்களை தள்ளுபடி செய்ததை போல மத்திய அரசும் செய்ய வேண்டும், என்று தெரிவித்தார்.