புதுடெல்லி: ‘தனது வேட்பாளர்களின் குற்றப் பின்னணி குறித்த விவரங்களை, அவர் சார்ந்த அரசியல் கட்சிகள் தேர்தலுக்கு முன்பாக 4 முறை விளம்பரப்படுத்த வேண்டும்,’ என தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.அரசு, நீதித்துறை பணிகளில் உள்ள ஒருவர் குற்ற வழக்கில் தண்டிக்கப்பட்டால் வாழ்நாள் முழுவதும் அவர்கள் தொடர்ந்து பணியாற்ற அரசால் தடை விதிக்கப்படுகிறது. ஆனால், கிரிமினல் குற்ற வழக்கில் அரசியல்வாதிகள் தண்டிக்கப்படுகிறபோது, தண்டனை முடிந்து 6 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டால் அவர்கள் எம்எல்ஏ, எம்பி தேர்தல்களில் போட்டியிடுகின்றனர். அமைச்சராகவும் கூட பதவி வகிக்க முடியும். இப்படிப்பட்டவர்களை நிரந்தரமாக தேர்தலில் நிற்க தடை விதிக்க உத்தரவிட வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதை விசாரித்த நீதிமன்றம், ‘கிரிமினல் குற்றங்களில் ஈடுப்பட்டவர்கள் தேர்தலில் போட்டியிட தடையில்லை. இருப்பினும், கிரிமினல் குற்ற வழக்கில் உள்ள வேட்பாளர் குறித்த முழு விவரங்களையும், மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் அந்த கட்சி தரப்பில் பத்திரிக்கை, டிவி உள்ளிட்ட ஊடகங்களில் விளம்பரம் வெளியிட வேண்டும்,’ என உத்தரவிட்டது.