இ.எம்.ஐ ஒத்திவைப்பு காலத்தில் வட்டிக்கு வட்டி வசூல் விவகாரம்: மத்திய அரசு விளக்கமளிக்க மேலும் இரண்டு வாரம் அவகாசம் வழங்கியது உச்சநீதிமன்றம்.!!!

டெல்லி: கொரோனா ஊரடங்கு காலத்தில் வங்கிகளில் பெறப்பட்ட தனிநபர் கடன், வீட்டுக் கடன், வாகனக் கடன், கடன் அட்டை மீதான கடன் உள்ளிட்ட அனைத்துத் தவணைகளையும் செலுத்துவதில் இருந்து கால அவகாசம் அளிக்கப்பட்டது.  ஆனால், இ.எம்.ஐ செலுத்த ஒத்திவைக்கப்படும் காலத்தில் வட்டிக்கு வட்டி வசூலிக்கப்படுவதாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. கடந்த 3-ம் தேதி வழக்கு விசாரணைக்கு வந்தபோது, வங்கிக் கடனுக்கான வட்டிக்கு வட்டியை  தள்ளுபடி செய்ய முடியாது என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

கடன் தொகையை திருப்பி செலுத்துவதற்கான அழுத்தத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, ஆகஸ்ட் 31 வரை கடன் தொகையை கட்டாதவர்களின் கணக்குகளை மறு உத்தரவு வரும் வரை வாராக்கடன் பட்டியலில் சேர்க்கக்கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை இன்றைய தினம்  ஒத்திவைத்தது.

இந்த நிலையில் உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது மத்திய அரசு சார்பில் இ.எம்.ஐ. வட்டிக்கு வட்டி வசூலிக்கும் விவகாரத்தில் முடிவெடுக்க அவகாசம் கேட்கப்பட்டது. இதனையடுத்து, ஆகஸ்ட் 31  வரை கடன் தொகையை கட்டாதவர்களின் கணக்குகளை மறு உத்தரவு வரும் வரை வாராக்கடன் பட்டியலில் சேர்க்கக்கூடாது என்ற தடை தொடரும் என்று தெரிவித்து. மத்திய அரசுக்கு இரண்டு வாரம் அவகாசம் அளித்த நீதிபதிகள் வழக்கின்  விசாரணையை செப்டம்பர் 28-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Related Stories: