காட்டுமன்னார்கோவிலில் ஏற்பட்ட பட்டாசு விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு.!!!

சென்னை: காட்டுமன்னார்கோவிலில் ஏற்பட்ட பட்டாசு விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இது தொடர்பாக முதலமைச்சர் திரு. எடப்பாடி மு.பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில், கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் வட்டம், குருங்குடி கிராமத்தில் இயங்கி வந்த பட்டாசுத் தொழிற்சாலையில் இன்று (4.9.2020) ஏற்பட்ட வெடி விபத்தில், பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த திரு. சின்னதுரை என்பவரின் மனைவி திருமதி காந்திமதி, திரு பெருமாள் என்பவரின் மனைவி திருமதி மலர்கொடி, திரு. நம்பியார் என்பவரின் மனைவி திருமதி லதா,

திரு. மாதவன் என்பவரின் மனைவி திருமதி ராசாத்தி, திரு. உத்திராபதி என்பவரின் மனைவி திருமதி சித்ரா, திரு. ராஜேந்திரன் என்பவரின் மனைவி திருமதி ருக்மணி மற்றும் திரு. ரங்கநாதன் என்பவரின் மனைவி திருமதி ரத்தினம்மாள் ஆகிய ஏழு நபர்கள் உயிரிழந்தனர் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன். மேற்கண்ட துயர சம்பவத்தில் அகால மரணமடைந்த ஏழு நபர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த துயரச் செய்தி குறித்து அறிந்தவுடன், மீட்புப் பணிகளை உடனடியாக மேற்கொள்ளவும், காயமடைந்தவர்களுக்கு உயரிய சிகிச்சை அளிப்பதை உறுதி செய்யவும், இறந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறவும் அவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளை செய்யவும் மாண்புமிகு தொழில் துறை அமைச்சர் அவர்களுக்கும், கடலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களுக்கும் நான் உத்தரவிட்டுள்ளேன்.

இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களின் குடும்ப நிலையினை கருத்தில் கொண்டு அவர்களின் குடும்பத்தினருக்கு தலா இரண்டு லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன்  என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: