வேலூர்: ஒன்று முதல் 19 வயது வரை உள்ள மாணவர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகளை 3 கட்டங்களாக வினியோகம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.மத்திய அரசின் தேசிய ஊரக சுகாதாரத்துறை சார்பில் ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதம் தேசிய குடற்புழு ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. அதன்படி அங்கன்வாடி மையங்களில் 1 முதல் 5 வயது குழந்தைகளுக்கும், அரசு பள்ளிகள், நிதியுதவி, தனியார் பள்ளிகளில் படிக்கும் 6 முதல் 19 வயது உள்ள அனைவருக்கும் குடற்புழு நீக்க மாத்திரை அல்பெண்டசோல் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக அங்கன்வாடி, பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டதால் ஆகஸ்ட் மாதம் வழங்க வேண்டிய குடற்புழு மாத்திரை வழங்கப்படவில்லை. செப்டம்பர் மாதம் நாடு முழுவதும் வழங்கி முடிக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.இதற்கிடையில் தமிழகம் முழுவதும் குடற்புழு மாத்திரைகளை 3 கட்டங்களாக வழங்க சுகாதாரத்துறை மூலம் பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:தமிழகம் முழுவதும் ஒரு வயது முதல் 19 வயது வரை உள்ளவர்களுக்கு வரும் 14ம் தேதி முதல் 28ம் தேதி வரை குடற்புழு நீக்க மாத்திரை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. முதல்கட்டமாக 14ம்தேதி முதல் 19ம் தேதி வரையும், 2வது கட்டமாக 21ம் தேதி முதல் 26ம் தேதி வரையும், விடுபட்டவர்களுக்கு 28ம் தேதி வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.