வருகிற செப்.1-ம் தேதி முதல் கர்நாடகாவில் மதுக்கடைகள், பார்கள், கேளிக்கை விடுதிகள் திறக்க முடிவு: கலால்துறை அமைச்சர் நாகேஷ் தகவல்

பெங்களூரு: கர்நாடகத்தில் வருகிற 1-ம் தேதி முதல் பார்களை திறக்க முடிவு செய்துள்ளதாக அம்மாநில கலால்துறை அமைச்சர் நாகேஷ் தகவல் தெரிவித்துள்ளார். கர்நாடகத்தில் கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வரும் நோக்கில் மதுக்கடைகள், பார்கள், கேளிக்கை விடுதிகளை மூட அரசு உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் ஊரடங்கில் சில தளர்வுகள் செய்யப்பட்ட பின்னர் மது விற்பனைக்கு அரசு அனுமதி அளித்து இருந்தது. ஆனால் கொரோனா பீதியால் மதுவாங்க குடிமகன்கள் ஆர்வம் காட்டுவது இல்லை. இதனால் கர்நாடகத்தில் மது விற்பனை வெகுவாக குறைந்து உள்ளது. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் ஆகஸ்ட் வரை 62 லட்சத்து 76 ஆயிரத்து பீர்பாட்டில் பெட்டிகள் விற்பனை ஆகி இருந்தது. ஆனால் இந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் 53 லட்சம் பீர்பாட்டில்கள் தான் விற்பனை செய்யப்பட்டு உள்ளது என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மது விற்பனையும் வெகுவாக குறைந்துள்ளதால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டு உள்ளது என கர்நாடக அரசு கூறியுள்ளது.

கொரோனா ஊரடங்கு காலத்தில் கலால்துறைக்கு ரூ.3 ஆயிரம் கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டு இருந்தது என கலால்துறை அமைச்சர் நாகேஷ் பேட்டியளித்தார். தற்போது சில நாட்களில் எங்களுக்கு ரூ.2 ஆயிரம் கோடி வருவாய் கிடைத்தது என கூறினார். இன்னும் 8 மாதங்களில் வருவாய் இழப்பை சரிசெய்ய நடவடிக்கை எடுப்போம் எனவும் கூறினார். பார்கள், கேளிக்கை விடுதிகளை திறந்தால் தான் மதுவிற்பனை அதிகரிக்கும் என தெரிவித்தார். வருகிற 1-ம் தேதி முதல் பார்கள், கேளிக்கை விடுதிகளை திறக்க முடிவு செய்து உள்ளோம் எனவும் இதுகுறித்து முதலமைச்சரிடம் பேசுவேன் என கூறினார். அரசு அனுமதி வழங்கியதும் பார்கள், கேளிக்கை விடுதிகளை திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

Related Stories: