திருவனந்தபுரம்: மூணாறு அருகே நிலச்சரிவில் சிக்கிய 3 பேரின் உடல் நேற்று கிடைத்த நிலையில், பலி எண்ணிக்கை 55 ஆக உயர்ந்துள்ளது. கேரள மாநிலம், மூணாறு அருகே ராஜமலை பெட்டிமுடி நிலச்சரிவில் சிக்கி 80க்கும் மேற்பட்ட தமிழக தோட்டத் தொழிலாளர்கள் மண்ணுக்குள் புதைந்தனர். இதில் 12 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். 52 பேர் சடலமாக நேற்று முன்தினம் வரை மீட்கப்பட்டு இருந்தனர். 6வது நாளாக நேற்றும் மீட்புப்பணி நடந்தது. இதில் கண்ணன்- சீதாலட்சுமி தம்பதியின் மகள் நதியா (12), பாரதிராஜா மகள் லக்ஷ்மண ஸ்ரீ (10) மற்றும் ஒரு பெண்ணின் அடையாளம் தெரியாத அழுகிய சடலம் என 3 சடலங்கள் மீட்கப்பட்டன. இதையடுத்து, நிலச்சரிவில் இறந்தவர்கள் எண்ணிக்கை 55 ஆக உயர்ந்துள்ளது. இன்னும் 7 குழந்தைகள் உட்பட 16 பேர் மண்ணில் புதைந்து இருப்பாதக கருதப்படுகிறது. இதனால், இன்றும் மீட்கும் பணி தொடர்ந்து நடக்க உள்ளது.