தங்கம் கடத்தல் வழக்கில் திருப்பம் தூதரக பார்சல்களில் மதநூல்கள் இல்லை: கேரள அமைச்சர் ஜலீலுக்கு சிக்கல்

திருவனந்தபுரம்: திருவனந்தபுரத்தில்  உள்ள அமீரக தூதரகத்துக்கு வந்த பார்சல்களில் மதநூல்கள் இல்லை என தகவல்கள்  வெளியானது அமைச்சர் ஜலீலுக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. திருவனந்தபுரம்  தங்க கடத்தல் வழக்கில் கேரள உயர்கல்வித்துறை அமைச்சர் ஜலீலுக்கு ேமலும்  பிடி இறுகுகிறது. திருவனந்தபுரம் ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தில் இருந்து  அமைச்சர் ஜலீலின் கட்டுப்பாட்டில் உள்ள அச்சகம் மற்றும் பயிற்சித்துறை  அலுவலகத்துக்கு ஏராளமான பார்சல்கள் கொண்டு செல்லப்பட்டது பெரும் சர்ச்சையை  ஏற்படுத்தியது. அதில் மதநூல்கள் இருந்ததாகவும், வேறு எதுவும் கிடையாது  எனவும் அமைச்சர் ஜலீல் கூறியிருந்தார். ஆனால் அவர் கூறியது பொய் என  தெரிய வந்துள்ளது.

தூதரகம் வழியாக மதநூல்களை எந்த நாட்டுக்கும்  அனுப்பி வைக்க மாட்டோம் என அமீரக தூதரக அதிகாரி ஒருவர் ஒரு மலையாள  பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். அவர் கூறுகையில், வேறொரு  நாட்டின் தூதரகம் மூலம் மதநூல்களை விநியோகிப்பது ஐக்கிய அரபு அமீரக அரசின்  கொள்கையில்லை. கேரளாவில் உள்ள தூதரகத்துக்கு மதநூல்களை நாங்கள்  அனுப்பவில்லை என கூறினார். தூதரக அதிகாரியின் இந்த பேச்சு அமைச்சர்  ஜலீலுக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. இதற்கிடையே தூதரக  பார்சல்கள் எதிலும் மதநூல்கள் அனுப்பப்பட வில்லை என சுங்கத்துறையும்  உறுதிப்படுத்தி உள்ளது. இந்த பார்சல்கள் முதலில் திருவனந்தபுரத்தில் உள்ள  அச்சகம் மற்றும் பயிற்சித்துறை அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டன.  பின்னர் அங்கிருந்து மலப்புரம் மாவட்டத்துக்கு அரசு வாகனங்களில் ெகாண்டு  சென்றுள்ளனர்.

இது சட்டப்படி தவறு என முன்னாள் வெளியுறவுத்துறை அதிகாரி  ஒருவர் தெரிவித்துள்ளார். இதற்கிடையே திருவனந்தபுரம் தூதரகத்தில்  இருந்து 32 பெட்டிகள் அச்சகம் மற்றும் பயிற்சித்துறைக்கு கொண்டு  செல்லப்பட்டுள்ளன. இது தொடர்பான ஆவணங்கள் சுங்கத்துறைக்கு கிடைத்துள்ளன.  இந்த 32 பெட்டிகளில் ஒரு பெட்டி மட்டுமே திறந்து பரிசோதிக்கப்பட்டுள்ளது.  மற்ற பெட்டிகள் திறக்கப்பட வில்லை. இவை அனைத்தும் உடனடியாக, அரசு வாகனத்தில்  மலப்புரத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன. அந்த பெட்டிகளில் என்ன இருந்தது  என தெரியவில்லை.

இது தொடர்பாக சுங்க இலாகா,  அச்சகத்துறையில் உள்ள 2 உயரதிகாரிகளிடம் விசாரணை நடத்தியது. இதில் பல  முக்கிய விபரங்கள் கிடைத்ததாக கூறப்படுகிறது. ஏற்கனவே வெளியுறவுத்துறை  சட்டத்தை மீறி அமீரக தூதரகத்தை அமைச்சர் ஜலீல் தொடர்பு கொண்டது குறித்து  மத்திய அரசு விசாரணை நடத்தி வருகிறது. இந்த நிலையில் பார்சல்களில்  மதநூல்கள் இல்லை என தகவல்கள் வெளியானது அமைச்சர் ஜலீலுக்கு மேலும் சிக்கலை  ஏற்படுத்தி உள்ளது.

எனக்கு கவலையில்லை

கேரள முதல்வர் பினராய் விஜயன் நேற்று அளித்த பேட்டியில், ‘‘தங்கம் கடத்தல் வழக்கில் என்ஐஏ விசாரணை நடத்துவது குறித்து எனக்கு எந்த கவலையும் இல்லை. எனக்கும் என் அலுவலகத்திற்கும் எதையும் மூடி மறைக்க வேண்டிய அவசியம் இல்லை. இந்த வழக்கில் உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று நான் தான் பிரதமருக்கு கடிதம் அனுப்பினேன். இனி, இந்த வழக்கில் உண்மைகள் வெளியாக அதிக நாட்கள் ஆகாது. எல்லா விவரங்களும் வெளியே வரும். அப்போது சிலருக்கு இதய துடிப்பு அதிகரிக்கும். என்னை நன்றாக தெரியும் என்று சொப்னா கூறியதாக நீதிமன்றத்தில் என்ஐஏ தெரிவித்துள்ளது. மாநில முதல்வரை தெரியாதவர் யார் இருக்க முடியும்?,’’ என்றார்.

Related Stories: