சென்னை: வடபழனியில் உள்ள நகை பட்டறையில் இருந்து 900 கிராம் தங்க கட்டியுடன் தப்பிய ஊழியரை பெங்களூரு விமான நிலையத்தில் சுங்கத்துறையினர் கைது செய்தனர். வடபழனி கங்கையம்மன் கோயில் தெருவில், கொல்கத்தாவை சேர்ந்த சுபேஷ் என்பவர் நகை பட்டறை நடத்தி வருகிறார். இவரிடம் கொல்கத்தாவை சேர்ந்த அபிசில் ரகுமான் (26) என்பவர் கடந்த ஓராண்டுகளுக்கும் மேல் பணியாற்றி வந்தார். இந்நிலையில், அபிசில் ரகுமானிடம் பட்டறை உரிமையாளர் சுபேஷ் 900 கிராம் தங்க கட்டிகளை கொடுத்து நகை செய்ய கூறியுள்ளார். ஆனால், உரிமையாளர் கொடுத்த தங்க கட்டிகளுடன் அபிசில் ரகுமான் தலைமறைவாகி விட்டார். இதுகுறித்து சுபேஷ் வடபழனி காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் புகார் அளித்தார். அதன்படி போலீசார் தங்க கட்டியுடன் மாயமான ஊழியரை தேடி வந்தனர்.