புதுடெல்லி: ‘சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் நீக்கப்பட்ட தலைப்புக்களில் இருந்து நடப்பு கல்வியாண்டில் மட்டும் தான் கேள்விகள் கேட்கப்படாது’ என விளக்கமளிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக நாட்டில் நிலவும் அசாதாரண சூழலை கருத்தில்கொண்டு சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் 9 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான பாடத்திட்டத்தை குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவித்து இருந்தார். முக்கியமான உள்ளடக்கங்களை மட்டும் வைத்துக்கொண்டு பிற பகுதிகளில் இருந்து 30 சதவீதம் வரை குறைப்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். ஜனநாயக உரிமைகள், இந்தியாவின் உணவு பாதுகாப்பு, கூட்டாட்சி குடியுரிமை மற்றும் மதசார்பின்மை ஆகிய தலைப்புக்கள் பாடப்பிரிவுகளில் இருந்து குறைக்கப்பட்டுள்ளது.