தஞ்சை அரசு மருத்துவமனையில் திடீர் தீ விபத்து: கரும்புகை சூழ்ந்ததால் குழந்தைகள் மூச்சுத்திணறல்..நோயாளிகள் தவிப்பு!!!

தஞ்சை: தஞ்சை அரசு மருத்துவமனையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் நோயாளிகள் மற்றும் அவரது உறவினர்கள் அலறியடித்துக் கொண்டு வெளியேறினர். ராசாமிராசுதார் மருத்துவமனை அலுவலகத்திற்கு பின்புறம் உள்ள குழந்தைகள் நல வார்டில் தீ பிடித்தது. புதிய பிரசவ வார்ட் மாடி கட்டிடம் தற்போது தான் கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வந்தது. இந்த பிரசவ வார்டில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்கள் பிரசவத்திற்காகவும், புதிதாக பிறந்த 50க்கும் மேற்பட்ட குழந்தைகளும் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

இந்த நிலையில், குழந்தைகள் நல வார்டில் உயர்மின் அழுத்தம் காரணமாக மின் கசிவு ஏற்பட்டு கம்பிகள் பற்றி எரிந்தன. கரும்புகைகள் அதிகளவில் சூழ்ந்ததால் பிரசவ பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதனால் அச்சமடைந்த பெற்றோர்கள், குழந்தைகளை தூக்கிக் கொண்டு கீழே இறங்கி ஓடினர். உடனடியாக குழந்தைகள் மீட்கப்பட்டு வேறொரு கட்டிடத்திற்கு மாற்றப்பட்டனர்.

தீ விபத்து காரணமாக அப்பகுதியில் மின்சாரம் நிறுத்தப்பட்டது. அத்துடன் மருத்துவமனை முழுவதும் மின்சாரம் இல்லாமல் இருளில் மூழ்கியது.  தீயணைப்பு வீரர்கள் விரைந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இருப்பினும், குழந்தைகளும், பிரசவ பெண்களும் மருத்துவமனைக்கு வெளியே வந்து அமர்ந்து சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்தனர். மேலும் பல பெண்கள் மயங்கிய நிலையிலேயே இருந்தனர். புதிதாக கட்டப்பட்ட கட்டிடத்தில் இந்த தீ விபத்து ஏற்பட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories: