சென்னை: தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மியாட் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு தகவல் பரவியது. தொடக்கத்தில் இந்த தகவலை அமைச்சர் மறுத்தார். இதன்பிறகு அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதாக தகவல் வெளியானது. அப்போதும் அமைச்சர் தரப்பில் இருந்து தனக்கு கொரோனா இல்லை என்று மறுப்பு தெரிவிக்கப்பட்டது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி அளிக்கும்போது, அமைச்சரே கொரோனா இல்லை என்று மறுத்துள்ளார் என்று தெரிவித்தார். மேலும், மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் அமைச்சர் கே.பி.அன்பழகன் பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்று டிவிட்டரில் பதிவிட்டார். ஆனால், தமிழக அரசு சார்பில் எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளியிடப்படவில்லை.