புதுடெல்லி: ‘அய்ஸ்...கொரோனா ஐஸ்...வாங்கி ஒரு தபா உறிஞ்சுங்க, அவ்ளோதான், கொரோனா ஓடிப்போயிடும்...வாங்க, வாங்க, வாங்கிட்டு எதிர்ப்பு சக்தியை ஏத்திக்குங்க...’ இப்படி ஒரு சூப்பர் விளம்பரத்தோட கொரோனாவில் இருந்து தப்ப, எல்லா மூலிகையும் அடங்கிய கொரோனா ஐஸ்கிரீம் வலம் வரத் துவங்கி விட்டது. கேரளாவில் இருந்து தயாரிக்கப்படுகிறது என்ற விவரத்தோடு இந்த ஐஸ்கிரீம் வெளியானது. கேரளா தானே மூலிகையின் சங்கமம். மக்கள் எளிதில் நம்பி விடுவார்கள் என்று இப்படி விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது என டிவிட்டரில் இந்த ‘தமாசு’ பற்றி வறுத்தெடுத்துட்டாங்க பலரும்.
இந்த ஐஸ்கிரீம் இந்தியாவின் முதல் ‘கொரோனா எதிர்ப்பு சக்தி’ ஐஸ்கிரீம் என்று அறிவித்துள்ளது இந்த நிறுவனம். மஞ்சள், மிளகு, சீரகம், திப்பிலி, வேப்பிலை என்று எல்லா மூலிகையும் அடங்கிய முழு உடல் எதிர்ப்பு சக்தி தரும் ஐஸ்கிரீம். வேறு எந்த பொருளில் மூலிகை வந்தாலும் ஐஸ்கிரீமில் மூலிகையுடன் சாப்பிட்டால், உடனே பலன் தரும்; பல்வேறு டேஸ்ட்களில் ஐஸ்கிரீம் தயாரிக்கப்பட்டுள்ளது என்று வேறு கூறியுள்ளது.