நீட் தேர்வு வினாத்தாள் கசிவு பாட்னாவில் 2 பேரை கைது செய்தது சிபிஐ

புதுடெல்லி: 2024ம் ஆண்டுக்கான நீட் தேர்வு முறைகேடுகள் குறித்து சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில் நீட் தேர்வு வினாத்தாள் கசிவு வழக்கில் பீகார் மாநிலம் பாட்னாவை சேர்ந்த 2 பேரை சிபிஐ முதன்முறை கைது செய்துள்ளது. தொடர்ந்து பாட்னாவில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட இருவருக்கும் நீதிமன்ற காவல் விதித்து நீதிபதி உத்தரவிட்டார். அவர்களை சிபிஐ காவலில் விசாரிக்க சிபிஐ அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

இதுகுறித்து சிபிஐ அதிகாரிகள் கூறியதாவது, “இந்த வழக்கில் பாட்னாவை சேர்ந்த மணீஷ் குமார், அசுதோஷ் குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் நீட் தேர்வெழுதிய மாணவர்களுக்கு வினாத்தாள், விடைகளையும் கொடுத்துள்ளனர்.  இவர்களில் அசுதோஷ் குமார் பாட்னாவில் ஒரு இடத்தில் ஆண்கள் விடுதி, ப்ளே ஸ்கூலை வாடகைக்கு எடுத்து அங்கிருந்து முறைகேடுகளை நடத்தி உள்ளார்.

அங்கிருந்து எரிந்த நிலையில் நீட் தேர்வு வினாத்தாள்களை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். மணீஷ் குமார், நீட் வினாத்தாள்களை வாங்க பணம் கொடுக்கும் மாணவர்களிடம் பேரம் பேசியுள்ளார். பின்னர் அசுதோஷ் குமாரிடம் அழைத்து சென்று வினாத்தாள்களை வாங்கி கொடுத்துள்ளார்” என தெரிவித்தனர்.

The post நீட் தேர்வு வினாத்தாள் கசிவு பாட்னாவில் 2 பேரை கைது செய்தது சிபிஐ appeared first on Dinakaran.

Related Stories: