சென்னை: ரேஷன் அரிசியை பட்டை தீட்டி கொரோனா நிவாரண நிதி என்ற பெயரில் பொதுமக்களுக்கு வழங்கி முறைகேடுகளில் ஈடுபடும் அ.தி.மு.க-வினர் மீது நடவடிக்கை எடுக்குமாறு திமுக முன்னாள் எம்.எல்.ஏ. அப்பாவு வலியுறுத்தியுள்ளார். ரேஷன் அரிசி கடத்தப்பட்டு, பட்டி தீட்டப்படுவதாக கிடைத்த தகவலை தொடர்ந்து சாத்தாங்குளம் அருகே உள்ள அரிசி ஆலையில் தூத்துக்குடி மாவட்ட உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் சமீபத்தில் சோதனை நடத்தினர். அப்போது 420 மூட்டை ரேஷன் அரிசி கைப்பற்றப்பட்டு, அரிசி ஆலை உரிமையாளர், லாரி ஓட்டுநர் உள்ளிட்ட 7 பேர் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பாக நெல்லை மாவட்ட ஆட்சியரை சந்தித்த திமுக முன்னாள் எம்.எல்.ஏ. அப்பாவு இந்த விவகாரத்தில் தொடர்புடைய அ.தி.மு.க-வினர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனு அளித்தார்.