அகமதாபாத்: குஜராத்தில் மாநிலங்களவை தேர்தல் நடைபெறுவதால், குதிரை பேரத்தை தவிர்க்க 20 காங்கிரஸ் எம்எல்ஏ.க்கள் விடுதியில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். குஜராத்தில் நான்கு மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் நாளை மறுநாள் நடைபெற உள்ளது. இதில், காங்கிரஸ், பாஜவுக்கு தலா 2 இடங்கள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஆனால், 3வதாக ஒரு வேட்பாளரை நிறுத்தியுள்ள பாஜ., காங்கிரஸ் எம்எல்ஏ.க்களை விலைக்கு வாங்கி வருகிறது. சில எம்எல்ஏ.க்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்து விட்டு, பாஜ.வில் இணைந்ததால் உஷாரான காங்கிரஸ் மேலிடம், மற்ற எம்எல்ஏ.க்களை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. தனது 65 எம்எல்ஏ.க்களை 4 குழுவாக பிரித்த காங்கிரஸ், அவர்களை பாதுகாப்பாக விடுதிகளில் தங்க வைத்துள்ளது. இதில், 20 எம்எல்ஏ.க்கள் ராஜஸ்தானில் தங்க வைக்கப்பட்டு இருந்தனர். இவர்கள் வடக்கு குஜராத்தை சேர்ந்தவர்கள். இவர்கள் ராஜஸ்தானில் இருந்து நேற்று அழைத்து வரப்பட்டு, அகமதாபாத்தில உள்ள விடுதியில் தங்க வைக்கப்பட்டனர்.