சிவகிரி செக்போஸ்டில் பணியாற்றுவோருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்படுமா?

சிவகிரி: சிவகிரி செக்போஸ்டில் பணியாற்றும் போலீசார், வருவாய்த்துறையினருக்கு கொரோனா பரிசோதனை செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. சிவகிரியில் செக்போஸ்ட் அமைக்கப்பட்டு வடமாநில மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து தென்காசி மாவட்டத்திற்கு வருபவர்கள் கொரோனா சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர். இதற்காக சிவகிரியில் உள்ள தனியார் கல்லூரியில் தனிமைப்படுத்தப்படும் முகாம் அரசு சார்பில் அமைக்கப்பட்டுள்ளது.

செக்போஸ்டில் பணியாற்றும் போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் சிறப்பு முகாம்களுக்கு சென்று அங்கு தனிமைப்படுத்தப்பட்டு உள்ளவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து வருகின்றனர். மருத்துவ பரிசோதனையில் கொரோனா தோற்று உறுதி செய்யப்பட்டவர்கள் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். செக்போஸ்டில் பணியாற்றும் போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் 3 ஷிப்டுகளாக பணியாற்றி வருகின்றனர். இவர்கள் நோய் தொற்று இருப்பவர்களையும் சோதனை செய்ய வேண்டிய நிலையில் உள்ளனர்.

கேரளா மாநிலம் செல்வோர் மிக அதிகளவில் சிவகிரி செக்போஸ்ட் கடந்துதான் செல்ல வேண்டி உள்ளது. இதனால் இங்கு பணிபுரியும் போலீசார் மற்றும் வருவாய்த்துறையினரின் பணி மேலும் அதிகமாகிறது. இவர்களுக்கு எளிதில் நோய் தொற்று ஏற்படும் சூழ்நிலை உள்ளது. இதனால் செக்போஸ்டில் பணியாற்றும் போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை நடத்த தேவையான நடவடிக்கைகளை தென்காசி மாவட்ட நிர்வாகம் துரிதமாக எடுக்க வேண்டுமென பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி உள்ளனர்.

Related Stories: