உடுமலை: திருப்பூர் மாவட்டத்தில் பருவமழை தாமதமாகி வரும் நிலையில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் சரிந்து வருகிறது. திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகள் உள்ளன. 90 அடி கொள்ளளவு கொண்ட அமராவதி அணை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாத இறுதியில் முழு கொள்ளளவை எட்டியது. தற்போது பருவமழை தாமதம் காரணமாக அணையின் நீர்மட்டம் 26.25 அடியாக உள்ளது. நீர்வரத்து 92 கன அடியாகவும், வௌியேற்றம் 6 கன அடியாகவும் உள்ளது.இதேபோல 60 அடி கொள்ளளவு கொண்ட திருமூர்த்தி அணையிலும் நேற்றைய நிலவரப்படி 24.81 அடி அளவிற்கே நீர்மட்டம் உள்ளது. அணையிலிருந்து குடிநீருக்காக வினாடிக்கு 27 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.அமராவதி அணையை பொறுத்தவரை திருப்பூர், கரூர் மாவட்டங்களில் சுமார் 54 ஆயிரம் ஏக்கர் விளைநிலம் பாசன வசதி பெறுகிறது. மேலும் கல்லாபுரம், ராமகுளம் நேரடி கால்வாய் மூலம் சுமார் 3500 ஏக்கர் விளைநிலம் பாசன வசதி பெற்று வருகிறது.