தண்டையார்பேட்டை: கொருக்குப்பேட்டை காவல் நிலையத்தில் பணியாற்றும் தலைமை பெண் காவலருக்கு, கடந்த 15ம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், கிண்டி ஐ.ஐ.டியில் உள்ள சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டார். அங்கு, சிகிச்சை முடிந்து 14 நாட்கள் வீட்டில் தனிமைபடுத்தப்பட்டு முழுமையான சிகிச்சைக்கு பின்னர் நேற்று பணியில் சேர்ந்தார். அவருக்கு, காவல் துறை துணை ஆணையர் சுப்புலட்சுமி, உதவி ஆணையர் ஆனந்தகுமார், ஆய்வாளர்கள் கவிதா, தவமணி, ஷீலாமேரி, உதவி ஆய்வாளர்கள், காவலர்கள் என அனைவரும் பூங்கொத்து மற்றும் மலர் கொடுத்து வரவேற்றனர். மேலும் கொருக்குப்பேட்டை பகுதியில் சிறப்பாக பணியாற்றிய 14 காவலர்களை கௌரவிக்கும் வகையில் துணை ஆணையர் பரிசு வழங்கினார்.