முத்தமிழறிஞர் கலைஞருக்கு இன்று 97வது பிறந்த நாள் நலத்திட்ட உதவிகளை வழங்கிட வேண்டும்: திமுகவினருக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

சென்னை: முத்தமிழறிஞர் கலைஞரின் 97வது பிறந்த நாளை முன்னிட்டு ஏற்கனவே அறிவித்ததற்கிணங்க நலத்திட்ட உதவிகளை வழங்கிட வேண்டும் என்று திமுகவினருக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை: நம் உயிருடன் கலந்திருக்கும் முத்தமிழறிஞர் கலைஞரின் 97வது பிறந்தநாளான ஜூன் 3ம் தேதி(இன்று) அனைத்து மாவட்ட-ஒன்றிய-நகர- பகுதி-வட்ட-பேரூர்- கிளைக் கழக நிர்வாகிகள் அவரவர் இடங்களிலேயே தலைவர் கலைஞர் அவர்களின் திருவுருவப் படத்திற்கும் - திருவுருவச் சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்திட வேண்டுகிறேன்.

 கொரோனா பரவலால், குறிப்பாக சென்னையில் தலைவர் கலைஞர் பிறந்தநாளுக்கான எவ்வித ஆடம்பர நிகழ்வுகளையும் நடத்த வேண்டாம். திமுக தலைவர் பொறுப்பில் உள்ள நான் தலைவர் கலைஞருக்கு மரியாதை செலுத்தும் நிகழ்விலும் யாரும் அணி திரண்டிட வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். ஏற்கனவே அறிவித்ததற்கிணங்க நலத்திட்ட உதவிகளை கழக நிர்வாகிகள் மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். அவரவர் இடங்களிலிருந்தே சமூக ஒழுங்கினைக் கடைப்பிடித்து,  தலைவர் கலைஞருக்கு மரியாதை செலுத்தியும் உதவிகள் செய்தும் தலைவர் கலைஞரின் புகழ் போற்றுவோம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: