மயிலாடுதுறை :மயிலாடுதுறை சோதனை சாவடியில், மதுரையில் இருந்து கொண்டு வரப்பட்ட ரூ.1 கோடி மதிப்பிலான போதை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மயிலாடுதுறை அருகே திருவாலங்காடு சோதனைச் சாவடியில் மணல்மேடு போலீசார் பணியில் ஈடுபட்டிருந்தனர். நேற்று விடியற்காலை மயிலாடுதுறையை நோக்கி, ‘காய்கறி, அவசரம்’ என ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு வேகமாக வந்த சரக்கு லாரியை தடுத்து நிறுத்தி சோதனை செய்ததில், அந்த லாரியில் அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருளான 60 மூடைகளில் 1,80,000 ஹான்ஸ் பாக்கெட்கள் பதுக்கி வைத்து கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, லாரி ஓட்டுநர் மதுரை மேலூரை சேர்ந்த பூரணஜோதி (32) என்பவரை கைது செய்து, ஹான்ஸ் மூட்டைகள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய லாரி ஆகியவற்றை குத்தாலம் போலீசில் ஒப்படைத்தனர்.