கிருஷ்ணகிரி: பர்கூர் காப்புக்காட்டிலுள்ள தொட்டிகள், குட்டைகளில் டிராக்டர் மூலம் தண்ணீர் நிரப்பும் பணியை வனத்துறையினர் முடுக்கி விட்டுள்ளனர். கிருஷ்ணகிரி வனச்சரகத்திற்குட்பட்ட பர்கூர் காப்புக்காடு 1,555 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்துள்ளது. இங்கு மான், காட்டுப்பன்றி, முயல், கீரி மற்றும் மயில், காடை, கவுதாரி, காட்டுக்கோழி உள்ளிட்ட வனவிலங்கினங்கள் மற்றும் பல்வேறு பறவைகள் வாழ்ந்து வருகின்றன. தற்போது மழையின்றி கடும் வெயில் வாட்டி வதைத்து வருவதால், காடுகளில் தண்ணீரின்றி குட்டைகள் முற்றிலும் வறண்டு போய் காணப்படுகிறது. இதனால், பர்கூர் சரகத்திற்குட்பட்ட காப்புக்காடுகளில் உள்ள தொட்டிகளில் வனத்துறையினர் டிராக்டர் மூலம் தண்ணீர் நிரப்பி வருகின்றனர்.