சென்னை: வறுமையை எதிர்த்து போராடிக்கொண்டிருக்கும் மக்களுக்கு உணவு வழங்கி உயிரை காப்பாற்ற பாஜ அரசு முன்வரவில்லை என்று கே.எஸ்.அழகிரி குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கை: 2020ல் மக்கள்தொகை 137 கோடி ஆக உயர்ந்த பிறகு அதில் 67 சதவீதமான 92 கோடி மக்களுக்கு தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின்படி உணவு தானியங்களை மத்திய பாஜ அரசு வழங்கியிருக்க வேண்டும். ஆனால், இதில் விடுபட்ட ஏறத்தாழ 10 கோடி மக்களுக்கு உணவு தானியங்கள் வழங்க மத்திய அரசு மறுத்து வருகிறது. இதனால் தமிழகத்தில் மட்டும் ஏறத்தாழ 3 லட்சம் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இவர்களுக்கு குடும்ப அட்டைகள் இல்லாதது தான் உணவு தானியங்கள் வழங்கப்படாமல் இருப்பதற்கு காரணம் என்று மத்திய அரசு கூறுவது ஏற்றுக்கொள்ள முடியாது.