அணைக்கட்டு: ஊசூர் அருகே உள்ள சுடுகாட்டில் வேற்று மதத்தினர் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு கிளம்பியதால் இந்து முறைப்படி உடல் அடக்கம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அணைக்கட்டு தாலுகா ஊசூர் அடுத்த சிவநாதபுரம் கிராமம் அருகே உள்ள குளத்துமேடு பகுதியில் இந்துக்களின் சுடுகாடு உள்ளது. சிவநாதபுரம் கிராமத்தில் உயிரிழந்த அந்த சுடுகாட்டில் அடக்கம் செய்து வருகின்றனர். இந்நிலையில் அப்பகுதியில் இந்துவாக இருந்து வேறு மதத்திற்கு மாறியவர்களும் வசித்து வருகின்றனர். அதில் ஒரு குடும்பத்தை சேர்ந்த 72 வயது மூதாட்டி ஒருவர் கடந்த 3ம் தேதி உயிரிந்தார். இதையடுத்து அவரது குடும்பத்தினர் இறந்தவரின் உடலை இந்துக்கள் சுடுகாட்டில் தங்களது முறைப்படி அடக்கம் செய்ய கடந்த 4ம் தேதி எடுத்து சென்றனர். இதையறிந்த இந்து முன்னணி மாவட்ட செயலாளர் பாண்டியன், ஒன்றிய தலைவர் விஜய்ஆனந்த், செயலாளர் சந்தோஷ் மற்றும் கிராம மக்கள் இந்துக்கள் சுடுகாட்டில் வேறு மதத்தவரின் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்தனர்.