சென்னை: ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசியல் கட்சிகள் நிவாரண உதவி வழங்க தடையில்லை என்ற நீதிமன்ற உத்தரவு திமுகவுக்கு கிடைத்த வெற்றி என தயாநிதி மாறன் எம்பி கூறினார். ஊரடங்கு உத்தரவு காரணமாக சென்னை சென்ட்ரல் வால்டாக்ஸ் சாலை ஓரத்தில், வறுமையில் தவிக்கும் 500 ஏழை எளிய குடும்பத்தினருக்கு 21 வகையான மளிகை பொருள், காய்கறி, ரொட்டி, சோப், பவுடர், பேஸ்ட், பிரஸ், கிருமி நாசினி, முகக்கவசம், உதவித்தொகை உள்ளிட்டவற்றை மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் நேற்று வழங்கினார். உடன் துறைமுகம் சட்டமன்ற உறுப்பினர் சேகர்பாபு இருந்தார். பின்னர், தயாநிதி மாறன் எம்பி நிருபர்களிடம் கூறியதாவது:திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், கட்சி நிர்வாகிகள் ஆகியோர் தமிழகம் முழுவதும் ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கி வந்தனர்.