சிதம்பரம்: சிதம்பரம் அருகே உள்ள பிச்சாவரம் சுற்றுலா மையம் மூடப்பட்டதால் வாழ்வாதாரத்தை இழந்து படகோட்டிகள் வீடுகளில் முடங்கி உள்ளனர். ஒவ்வொரு குடும்பத்துக்கும் 5 ஆயிரம் அரசு நிவாரணமாக வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வைத்துள்ளனர்.கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள பிச்சாவரம் இயற்கை எழில் கொஞ்சும் அழகிய சுரபுன்னை காடுகளைக் கொண்ட சுற்றுலா தளம். இந்த காட்டுப் பகுதியில் படகில் சவாரி செய்வது ஆனந்தமாக இருக்கும். சுற்றுலா பயணிகள் சுரபுன்னை காடுகளுக்கு நடுவே படகுகளில் சென்று காட்டின் அழகை ரசிப்பர். இந்நிலையில் கடந்த 23ம் தேதி கொரோனா ஊரடங்கால் இந்த பிச்சாவரம் சுற்றுலா மையம் மூடப்பட்டது. இதனால் பயணிகளின்றி அமைதியாக பிச்சாவரம் தற்போது வெறிச்சோடி காட்சியளிக்கிறது.பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் படகு ஓட்டுநர்களுக்கு நிரந்தர வருவாய் இல்லை. அவர்களுக்கு மாத ஊதியமோ, தினக்கூலி அடிப்படையிலோ சம்பளமோ கிடையாது. அதனால் சுற்றுலா வரும் பயணிகளிடம் படகு கட்டணமாக வசூலிக்கப்படும் தொகையில் கமிஷனாக சொற்ப தொகை மட்டுமே சம்பளமாக வழங்கப்பட்டு வருகிறது.