டெல்லி : உலகளாவிய கொரோனா பரவலுக்கும் 5ஜி அலைக்கற்றை தொழில்நுட்பத்திற்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். கொரோனா 5ஜி நெட்வொர்க் மூலம் தான் பரவி வருவதாக தீயாக ஒரு செய்தி பல்வேறு நாடுகளில் பரவி வருகிறது.அதாவது, 5ஜி டவர்களில் இருந்து வெளியாகும் அலை வரிசை காற்றில் இருக்கும் ஆக்சிஜனை உறிஞ்சிவிடும். அதன்பின் காற்றில் அது முக்கியமான வாயுக்களை வெளியிடும். இந்த வாயுக்கள் மூலம்தான் கொரோனா வைரஸ் பரவும். இது ஒரு நெட்வொர்க் போல பரவும். உலக நாடுகள் இதை திட்டமிட்டு பரப்பி வருகிறது. கொரோனா வைரஸ் என்பது திட்டமிட்ட தாக்குதல் என்று வதந்திகள் வெளியானது. கொரோனா தொற்று ஏற்படுவதற்கு 5ஜி தொழில்நுட்பம்தான் காரணம் என்ற வதந்தியால் இங்கிலாந்தில் 20க்கும் மேற்பட்ட செல்போன் கோபுரங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன.