சென்னை: கொரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலி காரணமாக தமிழகம் முழுவதும் திமுக நிகழ்ச்சிகள் மார்ச் 31ம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பொதுக்குழு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை: கடந்த 15ம் தேதி அறிக்கையின் வாயிலாக, திமுக பொதுக்குழுக் கூட்டம் மார்ச் 29ம் தேதி(ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணியளவில் சென்னை, அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கில் நடைபெறும் எனவும் இதில் பொதுச்செயலாளர் பொறுப்புக்கான தேர்வு நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. 16ம் தேதி கடிதத்தின் வாயிலாக கட்சியின் பொருளாளர் துரைமுருகன், பொதுச்செயலாளர் பொறுப்பிற்குப் போட்டியிட விழைவதாகவும், எனவே, அவர் தமது பொருளாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக என்னிடம் தெரிவித்துள்ளதை ஏற்றுக் கொண்டு மார்ச் 29ம் தேதி அன்று நடைபெறும் பொதுக்குழுக் கூட்டத்தில் பொதுச்செயலாளர் மற்றும் பொருளாளர் பொறுப்புகளுக்கான தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.