பொருளாளர் பதவியை ராஜினாமா செய்தார் பொதுச்செயலாளர் பதவிக்கு துரைமுருகன் போட்டி: மு.க.ஸ்டாலின் தகவல்

சென்னை: திமுக பொருளாளர் பதவியை துரைமுருகன் ராஜினாமா செய்துள்ளார். அவர் பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டியிட உள்ளதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திமுக பொதுச்செயலாளராக இருந்த பேராசிரியர் க.அன்பழகன் (98) கடந்த 7ம் தேதி காலமானார்.  1977ம் ஆண்டு முதல், தொடர்ந்து 43 ஆண்டுகள் திமுக பொது செயலாளராக இருந்து வந்தார். இந்த நிலையில் திமுகவின் புதிய பொதுச் செயலாளரை தேர்ந்தெடுப்பதற்கான பொதுக்குழு வருகிற 29ம் தேதி கூடும் என்று திமுக தலைவர் தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் அறிவித்தார். இந்த நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிவிப்பு: கடந்த 15ம் தேதி வெளியிட்ட அறிக்கையின் வாயிலாக திமுக பொதுக் குழு கூட்டம் வருகிற 29ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் பொதுச் செயலாளர் பொறுப்புக்கான தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்தநிலையில் 16ம் தேதி கடிதத்தின் வாயிலாக கட்சியின் பொருளாளர் துரைமுருகன், பொதுச் செயலாளர் பொறுப்பிற்கு போட்டியிட விழைவதாகவும், எனவே அவர் தமது பொருளாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாகவும் என்னிடம் தெரிவித்துள்ளதை ஏற்றுக் கொள்கிறேன். எனவே, 29ம் தேதி அன்று நடைபெறும் பொதுக் குழு கூட்டத்தில் பொதுச் செயலாளர் மற்றும் பொருளாளர் பொறுப்புகளுக்கான தேர்வு நடைபெறும். பொதுக் குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.திமுகவின் பொதுச் செயலாளராக துரைமுருகன் தேர்வு செய்யப்படுவது உறுதியாகிவிட்டது. அவர் தற்போது பொருளாளர் பதவியில் இருந்து விலகியுள்ளதால், அந்தப் பதவிக்கு போட்டியிடுகிறவர் யார் என்பது 29ம் தேதி பொதுக்குழுவில் தெரியவரும்.

Related Stories: