கம்பம்: கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, தேனி மாவட்டத்தில் வைகை அணை, சுருளி அருவி உள்ளிட்ட சுற்றுலாத்தலங்களை மார்ச் 31 வரை மூடுவதற்கு கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். கேரளாவிலிருந்து நமது மாநிலத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க, எல்லையோர மாவட்டங்களை தீவிரமாக கண்காணித்து, சுற்றுலாத்தலங்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களை மூடுவதற்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதனடிப்படையில், தேனி மாவட்டத்தில் பொதுமக்கள் அதிகமாக கூடும் வணிக வளாகங்கள், அனைத்து திரையரங்குகள், வைகை அணை பூங்கா, கும்பக்கரை அருவி, மேகமலை, சின்ன சுருளி மற்றும் சுருளி அருவியில் குளிக்கும் இடம் ஆகியவற்றை இம்மாத இறுதி (மார்ச் 31) வரை மூடுவதற்கு கலெக்டர் பல்லவி பல்தேவ் நேற்று உத்தரவிட்டுள்ளார். இங்கு சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படமாட்டார்கள்.