பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே உள்ள மாக்கினாம்பட்டி கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் போதிய இட வசதி இல்லாமல் மாணவர்கள் அவதிப்பட்டு வருகின்றனர். பொள்ளாச்சி அடுத்த மாக்கினாம்பட்டி கிராமத்தில் கடந்த 1939ம் ஆண்டு தொடங்கப்பள்ளி துவங்கப்பட்டது. கடந்த 2013ம் ஆண்டு வரை நடுநிலைப்பள்ளியாக செயல்பட்டு வந்த இந்த பள்ளியை உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும் என அப்பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து கடந்த 2014ம் ஆண்டு மாக்கினாம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, அரசு உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. இந்த பள்ளியில் மாக்கினாம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள பாலமநல்லூர், வைகை நகர், கல்லாங்காடு, ஜோதி நகர், அமைதி நகர், நேரு நகர் ஆகிய பகுதிகளை சேர்ந்த 400க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பயின்று வந்தனர். இந்நிலையில், இந்த பள்ளிக்கு கழிப்பிட வசதி மற்றும் விளையாட்டு மைதானம் போன்ற அடிப்படை வசதி இல்லாமல் மாணவர்கள் அவதிப்பட்டு வந்தனர்.