புதுடெல்லி: ‘‘எல்லைக்கு அப்பால் உள்ள பகுதிகளையும் தீவிரவாதிகள் பாதுகாப்பான புகலிடமாக பயன்படுத்த முடியாது என்பதை பாலக்கோடு விமான தாக்குதல் காட்டியுள்ளது,’ என பதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு பிப்ரவரி 14ம் தேதி காஷ்மீரின் புல்வாமா பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்துக்கு பதிலடியாக கடந்த ஆண்டு பிப்ரவரி 26ம் தேதி இந்திய விமானப்படை, பாகிஸ்தானின் பாலகோட்டில் செயல்பட்டு வந்த ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத பயிற்சி முகாமை தாக்கி அழித்தது. இந்நிலையில், `போரில்லா சூழ்நிலையில் விமானப்படையின் பங்கு’ என்ற தலைப்பில் டெல்லியில் நேற்று நடைபெற்ற கருத்தரங்கில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்றார். அப்போது, புல்வாமா தாக்குதலில் உயிர் தியாகம் செய்த 40 சிஆர்பிஎப் வீரர்களுக்கு வீர வணக்கம் செலுத்தினார். மேலும் பாலக்கோடு பகுதியில் விமான தாக்குதலில் ஈடுபட்ட வீரர்களையும் பாராட்டினார்.