டெல்லி: பொதுத்துறை தகவல் தொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல் வாடிக்கையாளர்களுக்கு சேவைகளை அளிக்க முடியாமல் தத்தளித்து வருகிறது. இந்நிலையில் கட்டாய விருப்ப ஓய்வில் 50 சதவீத ஊழியர்கள் வெளியேறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய தொலைத்தொடர்பு வளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்த பி.எஸ்.என்.எல் நிறுவனம், இன்று வாடிக்கையாளர் சேவை மையத்தில் கூட பணியாளர் இல்லாமல் திணறி வருகிறது. நிறுவனத்தின் வாடிக்கையாளர் எண்ணிக்கை சுமார் 12 கோடி. பணியாளர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 53 ஆயிரம். மிகப்பெரிய சந்தை, பணியாளர் பலம் இருந்தும், கடந்த 10 ஆண்டுகளாகவே நிறுவனம் நஷ்டத்தில் இயங்கி வருகிறது. கடந்த ஆண்டு நஷ்டம் சுமார் 19 ஆயிரம் கோடி ரூபாயாக உள்ளது. தனியார் நிறுவனங்களுக்கு 3ஜி, 4ஜி என அடுத்தடுத்து அலைக்கற்றை உரிமம் வழங்கிய மத்திய அரசு, பி.எஸ்.என்.எல் நிறுவனத்திற்கு மட்டும் 4ஜி உரிமம் அளிப்பதில் தாமதம் செய்துள்ளது. இதனால் பி.எஸ்.என்.எல்-க்கு பின்னால் தொடங்கப்பட்ட தனியார் நிறுவனங்கள் லாபத்தை கண்ட நிலையில், பி.எஸ்.என்.எல் நிறுவனமோ அவர்களுடன் போட்டியிட முடியாத நிலைக்கு சென்றது.