திருவனந்தபுரம்: கேரளாவில் தமிழக எல்லையோர சாலையில் பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி குண்டுகள் கைப்பற்றப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கேரள மாநிலம், கொல்லம் மாவட்டத்தில் திருவனந்தபுரம் - தென்மலை நெடுஞ்சாலையில் உள்ள குளத்துப்புழா வனப்பகுதி சாலையோரத்தில் நேற்று முன்தினம் மர்ம பார்சல் ஒன்று கிடந்தது. இப்பகுதி, தமிழக எல்லையில் இருந்து 20 கிமீ தூரத்தில் அமைந்துள்ளது. இந்த வழியக வந்த ஜோஷி, அஜீஷ் என்ற 2 வாலிபர்கள், அந்த பார்சலை திறந்து பார்த்தனர். அதில் துப்பாக்கி குண்டுகள் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனே, போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், அந்த பார்சலில் 14 துப்பாக்கி குண்டுகள் இருந்தன. 12 குண்டுகளில் ‘பிஓஎப்’ (பாகிஸ்தான் ஆயுத தொழிற்சாலை) எனவும், 1980-1982ல் தயாரிக்கப்பட்டதாகவும் முத்திரை பொறிக்கப்பட்டு இருந்தது. 2 குண்டுகளில் தயாரிப்பு விபரம் இல்லை.