புதுடெல்லி: தான் இறந்துவிட்டதாகவும், தனது சொத்துக்கள் யாருக்கு சென்றடைய வேண்டும் என்று சாமியார் நித்யானந்தா வெளியிட்ட வீடியோவால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பெண் சர்ச்சைகளில் சிக்கியவர் சாமியார் நித்யானந்தா. இளம்பெண்களை கடத்தி வைத்திருப்பதாக அவர் மீது குற்றச்சாட்டும் எழுந்தது. இதுதொடர்பாக அவருக்கு எதிராக நீதிமன்றத்தால் ஜாமீனில் வெளிவர முடியாத கைது வாரன்ட்டும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அவர் தற்போது வெளிநாட்டில் இருந்து கொண்டு தினந்தோறும் வீடியோக்கள் மூலம் தன்னை பின்பற்றுபவர்களிடம் பேசி வருகிறார். இந்தநிலையில் அவர் வெளியிட்ட புதிய வீடியோவில் கூறியிருப்பதாவது: கடந்த 20 ஆண்டு கால போராட்டத்தை தொடர்ந்து, கைலாசத்தை கட்டி முடித்துள்ளேன். கிறிஸ்தவர்களின் வாடிகனைப் போல, இந்து மதத்துக்கு என்று ஒரு இடத்தை உருவாக்க வேண்டும் என்ற எனது நீண்ட நாள் ஆசை நிறைவேறிவிட்டது.