சென்னை: ஜெயலலிதா பிறந்தநாள் மற்றும் நிதிநிலை அறிக்கையை விளக்க வருகிற 24ம் தேதி முதல் 28ம் தேதி வரை பொதுக்கூட்டங்கள் நடத்த வேண்டும் என்று அதிமுக கட்சியினருக்கு இபிஎஸ், ஓபிஎஸ் ஆகியோர் கூட்டாக வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் நேற்று கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கை: அதிமுக பொதுச்செயலாளராகவும், தமிழக முதலமைச்சராகவும் வாழ்ந்து மறைந்த ஜெயலலிதாவின் 72வது பிறந்தநாளை முன்னிட்டு, தமிழக அரசு, சட்டமன்றத்தில் தாக்கல் செய்துள்ள நிதிநிலை அறிக்கையின் சிறப்பு அம்சங்களை விளக்கி வருகிற 24ம் தேதி (திங்கள்) முதல் 28ம் தேதி (வெள்ளி) வரை அதிமுக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் ஒன்றியங்கள், நகரங்கள் மற்றும் மாநகராட்சிகளுக்கு உட்பட்ட பகுதிகளிலும், கழக அமைப்புகள் செயல்பட்டுக் கொண்டிருக்கும் புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, கேரளா, டெல்லி மற்றும் அந்தமான் உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் பொதுக்கூட்டங்கள் நடைபெற உள்ளன.