மணப்பாறை: மணப்பாறை வட்டாரத்தில் கொளுத்தும் வெயிலால் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 5 குடங்கள் வரை தண்ணீர் எடுத்துச் செல்லும் தள்ளுவண்டிகளுக்கு இப்போதே பொதுமக்கள் ஆர்டர் செய்வதால், இரும்பு பட்டறை உரிமையாளர்கள் பிஸியாக உள்ளனர். மணப்பாறை, வையம்பட்டி, மருங்காபுரி ஆகிய 3 ஒன்றியங்களிலும் இரவில் கடுங்குளிரும், பகலில் வெயிலும் கொளுத்தி வருகிறது. இதனால், குடிநீர் பஞ்சம் ஆங்காங்கே தலையெடுத்து வருகிறது. ஆகவே, மணப்பாறை பகுதி மக்கள் வெயில் காலத்தை சமாளிக்க இப்போதே இரண்டு சக்கரத்துடன் ஐந்து தண்ணீர் குடங்களை, எரிபொருள் செலவின்றி எளிதாக சுமந்து வரும் சிறிய வாகனமான தண்ணீர் வண்டிகளுக்கு இப்போதே ஆர்டர் செய்துள்ளனர். இதனால், நொச்சிமேடு, தீராம்பட்டி பகுதிகளில் உள்ள இரும்பு பட்டறை உரிமையாளர்கள் இப்பகுதி மக்களின் தேவையை உணர்ந்து ஜன்னல், கதவுகள், உள்பட பிற வெல்டிங் வேலைகளை தவிர்த்து தள்ளுவண்டிகளை தயார் செய்யும் பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர்.