டெல்லி: ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு எதிராக தமிழக விவசாயிகள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கின்றனர். ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் பி.ஆர். பாண்டியன் சார்பில் வழக்கு ஒன்று தொடரப்பட்டுள்ளது. பி.ஆர். பாண்டியன் சார்பில் வழக்கறிஞர் ஜி.எச். மணி என்பவர் உச்சநீதிமன்றத்தில் இந்த மனுவை தாக்கல் செய்திருக்கிறார். தமிழகத்தை பொறுத்தவரையில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை சுமார் 341 இடங்களில் வேதாந்தா மற்றும் ஓய்.எம்.பி.சி. நிறுவனங்கள் எடுப்பதற்கு மத்திய அரசு முடிவு செய்து அதற்கான ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்த மாநில அரசின் அனுமதி தேவையில்லை என மத்திய அரசு கடந்த 16ம் தேதியன்று தனது சுற்றறிக்கையில் கூறியிருந்தது. இது அரசியல் சாசனத்திற்கு எதிரானது. நிலத்தடி நீர் பாதிக்கப்படும். விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் என்றும் காவிரி டெல்டா பகுதியில் முற்றிலுமாக விவசாயம் முடங்கி விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் அவலநிலை உருவாகும் என்று பல்வேறு தரப்பினரும் குற்றம் சாட்டியிருக்கிறார்கள்.