மணப்பாறை: மணப்பாறையை அடுத்த கருங்குளம் ஜல்லிக்கட்டு போட்டியில் சீறிப் பாய்ந்த காளைகள் முட்டி 22 பேர் காயமடைந்தனர். திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த வையம்பட்டி அருகேயுள்ள கருங்குளம் புனித வனத்து அந்தோணியார் ஆலய திருவிழாவை முன்னிட்டு இன்னாசியார் திடலில் நேற்று ஜல்லிக்கட்டு போட்டி நடந்தது. காலை 9.30 மணிக்கு போட்டி தொடங்கியது. முதலில் கோயில் காளை வாடிவாசலில் இருந்து அவிழ்த்து விடப்பட்டது. அதை தொடர்ந்து வெளிமாவட்டத்தை சேர்ந்த 633 காளைகள் ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டது. ஆக்ரோஷமாக சீறிப்பாய்ந்து வந்த காளைகளை, 427 மாடுபிடி வீரர்கள் அடக்க முயன்றனர். இதில் சில காளைகள், வீரர்களை நெருங்க விடாமல் விரட்டியும், முட்டியும் தூக்கி வீசியும் சென்றன. சில காளைகளை வீரர்கள் அடக்கினர். சில காளைகள் தன்னை பிடித்து பாருங்கள் என்று சவால் விடும்வகையில், மைதானத்தில் நின்று விளையாடியது.