நான் அமைச்சராக இல்லாமல் இருந்தால் ஏர் இந்தியா நிறுவனத்தை ஏலத்தில் எடுத்திருப்பேன்: பியூஸ் கோயல் அதிரடி பேச்சு

டாவோஸ்; ‘நான் மத்திய அமைச்சராக இல்லாமல் இருந்தால், ஏர் இந்தியா விமான நிறுவனத்தை நானே ஏலத்தில் எடுத்திருப்பேன்,’ என்று மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார். சுவிட்சர்லாந்து நாட்டின் டாவோஸ் நகரில் நடைபெற்ற உலக பொருளாதார கூட்டமைப்பு மாநாட்டில் மத்திய வர்த்தகம் மற்றும் தொழிற்சாலைகள் துறை அமைச்சர் பியூஸ் கோயல் கலந்து கொண்டார். மாநாட்டின் இடைவெளியில் அவரிடம், ஏர் இந்தியா விமான நிறுவனம் மற்றும் பிபிசிஎல் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்கள் கடனில் தவிப்பதால் அதன் பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்ய மத்திய அமைச்சரவை முடிவு செய்திருப்பது பற்றி நிருபர்கள் கேள்விகள் எழுப்பினர். அதற்கு பியூஸ் கோயல் அளித்த பதிலில் கூறியதாவது:

ஏர் இந்தியா, பிபிசிஎல் போன்ற நிறுவனங்கள் கடனில் சிக்கி தவிப்பதால் அதை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நான் தற்போது அமைச்சராக இல்லாமல் இருந்தால், ஏர் இந்தியா விமான நிறுவனத்தை ஏலத்தில் எடுத்திருப்பேன். பிறநாட்டு விமான நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு ஏர் இந்தியா நிர்வாகத்தை சிறப்பாக செயல்பட வைத்திருப்பேன். இன்று, இந்தியா முதலீட்டுக்கு ஏற்ற நாடாக மாறியுள்ளது. அனைவருக்கும் சமமான வாய்ப்புகளை வழங்குகிறது.

முதலீட்டாளர்கள் மிகுந்த கவுரவத்துடன், நம்பிக்கையுடன் தொழில் செய்யலாம். பொதுத்துறை வங்கிகளின் பல்வேறு கடன் பிரச்னையை தீர்க்க ரிசர்வ் வங்கியும், இந்திய அரசும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளன. பொதுத்துறை வங்கிகள் தங்கள் வேலையை சரியாக செய்யவில்லை என்று நாங்கள் நினைக்கவில்லை. இந்தியாவில் உள்ள பல்வேறு தனியார் வங்கிகளும் எங்களுக்கு புகழ் சேர்க்கவில்லை. அரசால் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக நடத்தப்படும் வங்கிகள் நாட்டுக்கு சிறந்த சேவையாற்றி உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: