காஷ்மீரில் 2வது நாளாக சண்டை தீவிரவாதி சுட்டுக்கொலை

ஸ்ரீநகர்: காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்தில் உள்ள கெரோ பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று முன்தினம் அப்பகுதியை சுற்றிவளைத்து பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது, தீவிரவாதிகள்  - பாதுகாப்பு படையினர் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் சிறப்பு போலீஸ் அதிகாரி சபாஷ் அகமது, ராணுவ வீரர் ஒருவர் என 2 பேர் பலியாகினர். இந்நிலையில், நேற்று 2வது நாளாக இருதரப்பினர் இடையே துப்பாக்கிச்சூடு நடந்தது. இதில் அங்கு பதுங்கியிருந்த தீவிரவாதி ஒருவர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

இறந்த சிறப்பு போலீஸ் அதிகாரி சபாஷ் அகமதுவுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் பங்கேற்ற டிஜிபி தில்பக் சிங் நேற்று அளித்த பேட்டியில், ‘‘செவ்வாய்கிழமை இரவில் நிறுத்திவைக்கப்பட்ட தேடுதல் வேட்டை நேற்று காலை மீண்டும் தொடங்கியது. காஷ்மீரில் தீவிரவாதிகள் தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தேடுதல் வேட்டை தெற்கு காஷ்மீரில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. பாதுகாப்பு படையினர் இதேபோன்ற 6க்கும் மேற்பட்ட தாக்குதல்களை வெற்றிகரமாக நடத்தியுள்ளனர்’’ என்றார்.

Related Stories: