லக்னோ: அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணி மார்ச் மாதம் 25ம் தேதி தொடங்குகிறது. உச்சநீதிமன்ற உத்தரவுப்படி இதற்கான அறக்கட்டளை வருகின்ற பிப்ரவரி 9ம் தேதிக்குள் நிறுவப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான பணிகளை மத்திய உள்துறை அமைச்சகம் அமைத்துள்ள அதிகாரிகள் அடங்கிய குழு ஆய்வு செய்து வருகிறது. ராமர் கோவில் அறக்கட்டளை நிறுவப்பட்டதும் ராம நவமியையொட்டி மார்ச் 25ம் தேதி முதல் ஏப்ரல் 2ம் தேதிக்குள் கோயில் கட்டுமான பணி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு முன்னதாக கோவிலின் வடிவமைப்புக்கு பிரதமர் நரேந்திர மோடி ஒப்புதல் வழங்குவார். பாபர் மசூதி, ராமஜென்ம பூமி நில வழக்கில், கடந்த நவம்பர் 9ம் தேதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அயோத்தியில் உள்ள 2.77 ஏக்கர் நிலத்தில் ராமர் கோவில் கட்டி கொள்ளலாம் என்றும் இதற்காக 3 மாதத்துக்குள் அறக்கட்டளையை நிறுவ வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் கடந்த நவம்பர் மாதம் தீர்ப்பு வழங்கியது.