தீவிரவாதத்தால் பாதித்தவர்கள் நிவாரணத் தொகை பெற ஆதார் அட்டை கட்டாயம்: மத்திய அரசு புதிய உத்தரவு

புதுடெல்லி: நாட்டில் நடக்கும் மதக் கலவரங்கள், நக்சல்கள் அல்லது தீவிரவாதிகளின் தாக்குதல், எல்லையில் நடத்தப்படும் தாக்குதல், வெடிகுண்டு தாக்குதல்கள் போன்றவற்றால் பாதிக்கப்படுபவர்கள் அல்லது கொல்லப்படுபவர்களுக்கு மத்திய அரசு நிவாரணத் தொகை வழங்குகிறது. இந்நிலையில், இந்த நிவாரணத் தொகையை பெறுவதற்கு ஆதார் எண்ணை கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும் என்ற புதிய உத்தரவை மத்திய உள்துறை அமைச்சகம் பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக நேற்று அது வெளியிட்ட அறிக்கையில், ‘மதக் கலவரம், நக்சலைட்கள், தீவிரவாதிகள் நடத்தும் தாக்குதல்களில் உயிரிழப்பு அல்லது காயம் அடைந்தவர்கள், எல்லையில் நடத்தப்படும் தாக்குதல்களில் காயம் அல்லது உயிரிழந்தவர்கள், வெடிகுண்டு சம்பவங்களில் பாதிக்கப்படுவர்கள், ‘மத்திய மத, தீவிரவாத பாதிப்பு நிவாரண நிதி’யை பெறுவதற்கு தகுதி பெற்றவர்கள். இவர்களோ அல்லது குடும்பத்தினரோ இந்த நிவாரணத் தொகையை பெற விரும்பினால் ஆதார் எண் ஆதாரத்தை கட்டாயம் வழங்க வேண்டும். வங்கிகள் மூலம் எளிய நடைமுறையில் இந்த தொகையை பெறுவதற்காக இந்த நடைமுறை அமல்படுத்தப்படுகிறது. ஆதார் அட்டை இல்லாதவர்கள், சம்பந்தப்பட்ட அலுவலகங்களை நாடி அதை பெற்ற பிறகு சமர்ப்பிக்க வேண்டும்,’ என்று கூறப்பட்டுள்ளது.

Related Stories: