ஆளும் கட்சியினர் தேர்தலை நடத்த மறுத்திருப்பது அதிமுக அரசின் ஜனநாயக படுகொலை: முத்தரசன் கண்டனம்

சென்னை: சட்டம்-ஒழுங்கை ஆளும் கட்சியினரே சீர்குலைத்து, தேர்தலை நடத்த மறுத்திருப்பது அப்பட்டமான ஜனநாயகப் படுகொலை என்று இந்திய  கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: ஊரக உள்ளாட்சி  தேர்தலைத் தொடர்ந்து மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர்கள் மற்றும் ஒன்றிய ஊராட்சிக்குழு தலைவர்கள் தேர்வுக்கான மறைமுகத் தேர்தல்  நடைபெற்றது. உள்ளாட்சி தேர்தலில் மறைமுக தேர்தலுக்கான சட்டத்திருத்தம் கொண்டு வந்த போதே ஆளும் அதிமுக அரசு அதிகாரத்தை தவறாக  பயன்படுத்தி, மாநில தேர்தல் ஆணையத்தின் மீது அழுத்தம் கொடுத்து தேர்தல் முடிவுகளை தனக்கு சாதகமாக அறிவித்துக் கொள்ளும் என இந்தியக்  கம்யூனிஸ்ட் கட்சி எச்சரித்திருந்தது.

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு ஒன்றியத்தில் மொத்தமுள்ள 13 வார்டுகளில் 7 வார்டு உறுப்பினர்களின் வாக்குகள் திமுக கூட்டணி வேட்பாளர்  பெற்றிருந்தார். அதனை திரும்ப, திரும்ப எண்ண வைத்து, இறுதியில் அதிமுகவினர் தேர்தல் மையத்தில் அத்துமீறி நுழைந்து கலகம் செய்ததால்  தேர்தல் ஒத்திவைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் நடத்தும் அலுவலருக்கு ‘திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டால் என்ன செய்வது என்பதை மாநில தேர்தல் ஆணையம் சிந்திக்க மறந்ததால்  பல இடங்களில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. திமுகவும், அதன் கூட்டணி கட்சிகளும், வெற்றி பெறும் வாய்ப்புள்ள இடங்களில்  ‘சட்டம்-ஒழுங்கை’ ஆளும் கட்சியினரே சீர்குலைத்து, தேர்தலை நடத்த மறுத்திருப்பது அப்பட்டமான ஜனநாயகப் படுகொலையாகும். அதிமுகவின்  அதிகார அத்துமீறலை வன்மையாகக் கண்டிக்கிறது.

Related Stories: