குற்றாலம் கோயில் திருவாதிரை திருவிழாவில் சித்திர சபையில் நடராஜ சுவாமிக்கு பச்சைசாத்தி தாண்டவ தீபாராதனை

தென்காசி: குற்றாலம் குற்றாலநாத சுவாமி கோயில் மார்கழி திருவாதிரை திருவிழாவில் நேற்று சித்திர சபையில் நடராஜ சுவாமிக்கு பச்சை சாத்தி தாண்டவ தீபாராதனை நடந்தது. நாளை (10ம் தேதி) ஆருத்ரா தரிசனம் நடக்கிறது. குற்றாலம் குற்றாலநாத சுவாமி கோயிலில், கடந்த 1ம் தேதி திருவாதிரை திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவில் தினமும் காலை, மாலையில் சிறப்பு அபிஷேக அலங்காரம், தீபாராதனைகள், இரவில் சுவாமி - அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதியுலா நடந்து வருகிறது. கடந்த 4ம் தேதி பஞ்சமூர்த்திகள் புறப்பாடு, 5ம் தேதி பஞ்சமூர்த்திகள் தேரோட்டம் நடைபெற்றது.

நேற்று காலை சித்திர சபையில் நடராஜ மூர்த்திக்கு பச்சை சாத்தி தாண்டவ தீபாராதனை நடந்தது. முன்னதாக நடராஜருக்கு பல்வேறு நறுமணப் பொருட்களால் சிறப்பு அபிஷேகங்கள் நடந்தது. பூஜைகளை கணேசன் பட்டர் தலைமையில் ஜெயமணிசுந்தரம் பட்டர்,  பிச்சுமணி என்ற கண்ணன்பட்டர், மகேஷ்பட்டர் ஆகியோர் நடத்தினர். ஓதுவார் சங்கர நாராயணன், திருவெம்பாவை பாடல்களை பாடினார். இதில் கோயில் உதவி ஆணையர் விஜயலெட்சுமி, முன்னாள் அறங்காவலர் வீரபாண்டியன், திருமலைக்குமார், திமுக ஒன்றிய செயலாளர் ராமையா, இலஞ்சி அன்னையாபாண்டியன், சர்வோதயா கண்ணன் மற்றும் கட்டளைதாரர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

சிவபூதகண வாத்தியங்களும் இசைக்கப்பட்டன.

விழாவில், நாளை (10ம் தேதி) குற்றாலம் வர்த்தக சங்கம் சார்பில் நடைபெறும் மண்டகப்படியை முன்னிட்டு அதிகாலை 3.20 மணிக்கு மேல் சித்திர சபையில் ஆருத்ரா தரிசன தாண்டவ தீபாராதனை, 5 மணிக்கு கோயில் திரிகூடமண்டபத்தில் தாண்டவ தீபாராதனை நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் மற்றும் கட்டளைதாரர்கள், வர்த்தக சங்கத்தினர் செய்து வருகின்றனர்.

Related Stories: